கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் முட்டைக்கோஸ் விலை குறைந்துள்ளதால் பயிரிட்ட விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
தேனி மாவட்டம், கம்பம் கூடலூர் சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முட்டைக்கோஸ் பயிரிடப்பட்டு வருகிறது. சுமார் 120 நாள் பயிரான முட்டைக்கோஸ் நாற்றுகள் மற்றும் விதைகள் மூலம் பயிரிடப்பட்டு வருகிறது.
சுமார் 90 கிலோ கொண்ட மூடை ரூ.300-க்கு வியாபாரிகள் எடுத்து செல்கின்றனர். இதனால் இதை பயிரிடும் விவசாயிகளுக்கு உற்பத்தி விலை கிடைக்கவில்லை. முட்டைக்கோஸ் பயிரிட்ட விவசாயிகள் போதுமான விலை கிடைக்காததால் கவலையில் உள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும் போது, ஓசூர் பகுதிகளில் இருந்து முட்டைக்கோஸ் தேனி மாவட்டத்திற்கு அதிக வரத்து வருவதால் உள்ளூரில் வியாபாரிகள் கொள்முதல் விலை குறைவாக எடுக்கின்றனர்.
இதனால் நாங்கள் தற்போது கேரளாவுக்கு அனுப்புகிறோம். ரூ. 400 முதல் 450 வரை விலை கிடைக்கிறது என்றார்.
இதுபற்றி தோட்டக்கலைத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முட்டைக்கோஸ் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஓசூர் பகுதிகளில் இருந்தும் முட்டைக்கோஸ் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முட்டைக்கோஸ் விலை குறைவு ஏற்பட்டுள்ளது என்றார்.