விவசாயிகளைக் காக்க புதிய சட்டம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னையில் இன்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில்,
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கண்ட கனவின்படி, உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திறமையும், வலிமையும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருடம் ஒன்றுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள சிறந்த 500 இளைஞர்கள், இளம் பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உணவு மற்றும் உறைவிடம் வழங்கி, 3 ஆண்டுகளுக்கு குடிமைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயிற்சி வழங்கி அவர்களை பணியில் அமர்த்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமமண்டல் ஆணையத்தின் பரிந்துரையின்படி, மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் சேருவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவிகிதம் ஒதுக்கீட்டை 10 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படும்.
மாதம் ஒருமுறை விசைத் தறியாளர்களுக்கு மின் கணக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருநங்கைகளுக்கான நல்வாழ்வை உறுதிப்படுத்த, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சீர்திருத்தங்கள் செய்யப்படும்.
பணியின்போது பாதிக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய நிவாரணமும், பணியின் போது இறக்க நேரிடும் பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.