தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு நன்மை கிடைப்பது அதிமுக ஆட்சியில்தான் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தேரடியில் புதன்கிழமை காலை பாஜக வேட்பாளர் பூண்டி எஸ். வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தங்களுடைய நிலமெல்லாம் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் இருந்தனர். இம்மாவட்ட விவசாயிகளின் அச்சத்தையும், துன்பத்தையும் போக்குவதற்காகப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடகத்திடம் இருந்து போராடித்தான் காவிரியில் நம்முடைய தண்ணீரை பெற்று வரும் நிலை இருந்து வந்தது. அதுவும் கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு இருக்கும் உபரி நீர் மட்டும்தான் நமக்கு தரப்பட்டது. அந்த நிலைமையை மாற்ற ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று, சட்டப் போராட்டம் நடத்தி மரணம் அடைந்தார்.
தற்போது நடைபெறும் அவருடைய ஆட்சியில்தான் காவிரியில் நமக்குச் சட்டபூர்வமாக தண்ணீர் கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை இந்த அரசுதான் முன்னெடுத்துச் செல்கிறது. இந்த ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கிறது. தமிழக விவசாயிகளுக்குச் சாகுபடி செய்வதற்குத் தண்ணீர் பெற்றுத் தருவதுதான் இந்த அரசின் லட்சியம் என்றார் முதல்வர் பழனிசாமி.