மணப்பாறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மூலம் பாரதியார் நகர், எம்ஜிஆர் நகர், சாய் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு கடந்த சில நாட்களாக முறையாக காவிரி நீர் ஏற்றாத நிலையில், குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த அப்பகுதியினர் குடிநீர் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை போலீஸார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் மணப்பாறை - புதுக்கோட்டை சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.