கிறிஸ்துவ வன்னியா்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காந்திராஜன் மற்றும் நத்தம் தொகுதியில் போட்டியிடும் ஆண்டி அம்பலம் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். வட மதுரையில் நடைபெற்ற இந்த பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் விஸ்வநாதன் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வழங்கியது அவரது பணம் இல்லை. ஜெயலலிதாவிடம் கொள்ளையடித்த பணத்தை தான் வழங்கியுள்ளார். அதனால் அவர் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தோற்க வேண்டும் என்பதற்காகவே நத்தம் விசுவநாதன் ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அனுப்பப்பட்டார்.
ஆட்சி பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்கும் திமுக மட்டுமே. 50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நான் இன்றைக்கு முதல்வர் வேட்பாளராக வந்துள்ளேன். பத்தாண்டுகளாக பாழ்பட்டுள்ள ஆட்சியை அகற்ற வேண்டும். பழனிசாமி பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார். திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவசமாக நிலம் வழங்குவோம் என அறிவித்துவிட்டு வழங்கவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 2006 இல் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி 1.89 லட்சம் ஏக்கர் நிலத்தை 1.59 லட்சம் பேருக்கு வழங்கினார். இந்த உண்மையை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன். சவாலை ஏற்க முதல்வர் பழனிசாமி தயாராக உள்ளாரா.
ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை நீட்தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. ஆனால், தற்போது நீட் தேர்வு வந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். செல்லிடப்பேசி தருவதாக உறுதி அளித்தவர்கள் அதனை நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக ஹெலிகாப்டர், விமானம், ரயில் தருவதாக முதல்வர் பழனிசாமி கூறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நத்தத்தில் அரசு கலைக் கல்லூரி, வேடசந்தூர் மக்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும். கிறிஸ்தவ வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார்.