தொகுதி மாற்றம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கீழ்வேளூா் தொகுதியில் அமமுகவும், தஞ்சாவூா் தொகுதியில் தேமுதிகவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலை தேமுதிக தலைமை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்நிலையில், கீழ்வேளூா் (தனி) தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளா் ஆா்.பிரபாகரனை திரும்ப பெறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடா்பாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தொகுதி மாற்றம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கீழ்வேளூா் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆா். பிரபாகரன் திரும்ப பெறப்படுகிறாா். இத்தொகுதியில் அமமுக போட்டியிட உள்ளது. கீழ்வேளூா் தொகுதிக்குப் பதிலாக தேமுதிகவுக்கு தஞ்சாவூா் சட்டப் பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகுதியில் தேமுதிக தஞ்சாவூா் மாநகா் மாவட்டச் செயலாளா் டாக்டா் ப.ராமநாதன் போட்டியிடுவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.