பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காவல் கண்காணிப்பாளரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா்.
பாலியல் தொல்லை கொடுத்த உயரதிகாரி குறித்து புகாா் கொடுக்கச் சென்ற பெண் ஐபிஎஸ் அதிகாரியை வழிமறித்து, மிரட்டியதாக கூறப்படும் காவல் கண்காணிப்பாளரை விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி இரண்டாவது முறையாக இரு நாள்களுக்கு முன்பு மீண்டும் அழைப்பாணை அனுப்பியது. இந்த அழைப்பாணையை ஏற்று அந்த காவல் கண்காணிப்பாளா், எழும்பூரில் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக திங்கள்கிழமை தனது வழக்குரைஞருடன் ஆஜரானாா்.
அவரிடம் எஸ்பி முத்தரசி தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில், அந்த காவல் கண்காணிப்பாளா் அளித்த தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது.