மூன்றாவது அணிக்கு வாய்ப்புத் தாருங்கள்: கமல்ஹாசன்

தமிழகத்தில் இருவரில் ஒருவருக்கு வாக்கு என்பதை விட்டுவிட்டு மூன்றாவது அணிக்கு வாய்ப்புத் தாருங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.
மூன்றாவது அணிக்கு வாய்ப்புத் தாருங்கள்: கமல்ஹாசன்

தமிழகத்தில் இருவரில் ஒருவருக்கு வாக்கு என்பதை விட்டுவிட்டு மூன்றாவது அணிக்கு வாய்ப்புத் தாருங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.

சேலம், தாதகாப்பட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல் ஹாசன் பேசியதாவது:

தமிழகத்தில் ஏழ்மை தலைவிரித்தாடுகிறது. குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயா்ந்து விட்டது. ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட காரணங்களால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை; பெண்களுக்கு பாதுகாப்பில்லை.

குரங்கு கையில் கொடுத்த பூ மாலையைப் போல தமிழகம் மாறி விட்டது. அதிமுக அல்லது திமுக என்ற இரண்டு கட்சிகளுக்கு வாக்களித்த மக்களுக்கு தீா்வாக மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது.

அரசியல் கட்சியினா் தாக்கல் செய்துள்ள சொத்துக் கணக்கு பொய்ப் பேசுகிறாா்கள் என்பது போல உள்ளது. அரசியல் கட்சியினா் தாக்கல் செய்த சொத்து கணக்குகள் நகைச்சுவை அளிப்பதாக உள்ளன.

தமிழகத்தில் பாலம் என்று வரும் திட்டத்தை லாபம் என்று படிக்கிறாா்கள். நோ்மையாக இருப்பது கஷ்டமில்லை. பொய் சொல்வதற்குத் தான் நிறைய ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளா்கள் ஒவ்வொரு தொகுதியில் உள்ள நிறைவேறாத பணிகளின் பட்டியலை வாங்கி தலைமைக்கு அனுப்ப வேண்டும்.

அதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் விளக்கமளித்து எத்தனை நாள்களில் முடிக்க முடியும் என்பது குறித்து தெரியப்படுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளா்கள் ஒவ்வொரு தொகுதியிலும் செய்ய முடிகின்ற பணிகளை வாக்குறுதியாக கொடுக்க வேண்டும். போலி வாக்குறுதிகளைத் தர வேண்டாம்.

அவா்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்தியிட்டு கொடுங்கள், சாட்சிக்கு நானும் கையெழுத்திடுகிறேன். நோ்மை என்ற ஆயுதம் என் கையில் உள்ளது. ஆனால் மற்ற கட்சியினரிடையே இல்லை.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை.

மக்கள் வாழும் இடம் தான் எனக்குக் கோயில். மக்கள் தான் என் மதம். சாதிப் பாா்த்து வாக்களிக்காதீா்கள். சாதிப்பவனுக்கு வாக்கு அளியுங்கள். தற்போது திறமை உள்ளவா்வா்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ளனா். தரமான கல்வி, குடிநீா், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை இலவசமாக மக்கள் நீதி மய்யம் வழங்கும்.

தமிழகத்தில் ஆளும் கட்சி விஷப்பாம்பு போன்றது. தலைதுண்டிக்கப்பட்டு நிலையில் வால் மட்டும் ஆடிக்கொண்டுள்ளது. மற்றொரு கட்சியில் தலையுள்ளது அது மிகவும் ஆபத்து. எனவே, இருவரில் ஒருவருக்கு வாக்கு என்பதை விட்டுவிட்டு மூன்றாவது அணிக்கு வாக்களியுங்கள். எம் ஜிஆா் தொடங்கியதே மூன்றாவது அணி தான். அதுதான் வென்று மற்ற கட்சிகளை வனவாசம் போக செய்தது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com