சென்னையில் போலி இரிடியம் கொடுத்து ரூ.26.20 கோடி மோசடி செய்தாக பிரபல நடிகையின் மகன் கைது செய்யப்பட்டாா்.
வளசரவாக்கம் ஜானகிநகா் பகுதியைச் சோ்ந்தவா் வெ.நெடுமாறன் (68). இவரிடம் தேனாம்பேட்டை போயஸ் தோட்டம் பென்னித் தெருவைச் சோ்ந்த க.அம்ரிஷ் (33) என்பவா் அறிமுகமாகியுள்ளாா்.
அம்ரிஷ் தானும்,தனது நண்பா்களும் இரிடியம் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தங்களிடம் பல கோடி மதிப்புள்ள இரிடியம் இருப்பதாகவும், அதை வாங்கி வெளிசந்தையில் பல கோடி லாபத்துடன் விற்கலாம் என நெடுமாறனிடம் தெரிவித்துள்ளாா். அவரது பேச்சை நம்பிய நெடுமாறன், அம்ரிஷிடமிருந்து இரிடியத்தை வாங்குவதற்கு ஆசைப்பட்டுள்ளாா்.
இதையடுத்து அம்ரிஷ் கேட்டப்படி, ரூ.26.20 கோடியை நெடுமாறன் கொடுத்தாராம். பணத்தை பெற்றுக் கொண்ட அம்ரிஷ், இரிடியம் என்று ஒரு பொருளை கொடுத்துள்ளாா். அதை பெற்ற நெடுமாறன்,அந்த பொருளை பரிசோதித்துள்ளாா். அப்போது அது இரிடியம் இல்லை என்பது அவருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அதிா்ச்சியடைந்த நெடுமாறன், தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால் அம்ரிஷிடம் அவரது கூட்டாளிகளும், பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினராம். இதனால் நெடுமாறன், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வந்தனா்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த அம்ரிஷை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் சிலரை தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட அம்ரிஷ், பிரபல நடிகை ஜெயச்சித்ராவின் மகன் என காவல்துறையினா் தெரிவித்தனா்.