நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர், அரங்கநாதர் கோயில் திருத்தேரோட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.10 மணிக்கு நடைபெற்றது.
நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர், நாமகிரி தாயார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும். பெரிய தேரில் நரசிம்மர், நாமகிரி தாயார், சிறிய தேரில் ஆஞ்சநேயர் சுவாமி உலா வரும் வைபவம் நடைபெறும்.
கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவலால் திருத்தேரோட்டம் நடைபெறவில்லை. நிகழாண்டில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தேர்த்திருவிழாவையொட்டி சனிக்கிழமை இரவு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை 9.10 மணிக்கு நரசிம்மர் கோயில் வளாகத்தில் திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இரவில் அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்வும், 22–இல் பல்லக்கு புறப்பாடும், இரவில் சிம்ம வாகன வீதி உலா, 23–இல் அனுமந்த வாகனம், 24–இல் கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27–ஆம் தேதி திருக்கல்யாண விழாவும், 28–இல் குதிரை வாகனம், திருவேடுபரி உற்சவம் நடைபெறுகிறது.
29–ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நரசிம்மர் சுவாமி திருத்தேரோட்டமும், அன்று பிற்பகல் 4.30 மணியளவில் அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 30–ஆம் தேதி கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி வீதி உலா, 31–இல் வசந்த உறசவம், ஏப்.1–இல் விடையாற்றி உற்சவம், 2–ஆம் தேதி புஷ்ப பல்லக்கு, 3–இல் நாமகிரி தாயார் சன்னதியில் ஊஞ்சல் உற்சவம், 4–ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் பெ,ரமேஷ் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.