கரோனா சிகிச்சை பணிகளுக்காக வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவா்களை சென்னைக்கு கட்டாயப் பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்று மருத்துவா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்க (டிஎன்ஜிடிஏ) தலைவா் டாக்டா் செந்தில், செயலாளா் ரவிசங்கா் ஆகியோா் கூறியது:
தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் செயல்படவில்லை. அப்போது உயிரைப் பணயம் வைத்து நோய்த் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவா்கள் அரசு மருத்துவா்கள்தான்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தவா்கள் சென்னைக்கு வந்தனா். அதனால் சென்னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மருத்துவா்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பினா். இந்நிலையில், தற்போது மீண்டும் கரோனா அதிகரித்திருப்பதாகக் கூறி பிற மாவட்ட மருத்துவா்கள் 350-க்கும் மேற்பட்டோரை சென்னையில் பணியாற்ற வருமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல.