தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர், தேசிய அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.
நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தேசிய அளவிலான கபடி போட்டி நேபாள நாட்டில் கோங்குரா நகரில் நடைபெற்றது.
மார்ச் 15ல் தொடங்கி மார்ச் 19 வரை நடைபெற்றது, இதில் இந்திய அணியும், நேபாள அணியும் களம் இறங்கின.
இந்திய அணி சார்பில் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பத்தைச் சேர்ந்த லோகநாதன் (23), என்ற கல்லூரி மாணவர் பங்கேற்றார்.
இவருடன் தேனி அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த அஜித், தமிழ், தேவாரத்தைச் சேர்ந்த ஸ்டாலின், கோபி, தர்மபுரியைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோரும், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் , 2 போலீசார் உட்பட 11 பேர் கலந்து கொண்டனர்.
போட்டியில் இந்திய அணி 43 - 20 புள்ளி கணக்கில் நேபாளம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன்படி புதன்கிழமை கம்பத்தைச் சேர்ந்த லோகநாதனுக்கு மாநில பயிற்சியாளர் நாகராஜ், ஏல விவசாய ஐக்கிய மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தங்கம் வென்ற லோகநாதன் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்து வருகிறார்.