அஞ்சல் வாக்குகள் சேகரிக்கும் பணி நாளை முதல் தொடங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் அஞ்சல் வாக்குப் படிவம் வழங்கும் வாகன சேவையை ஆணையர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் தபால் வாக்குகளை வழங்க 70 வாகனங்கள் உள்ளன.
ஒரு வாகனத்தில் 2 வாக்குப்பதிவு அலுவலர்கள், நுண் பார்வையாளர்கள், ஒளிப்பதிவாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வரும் 31-ம் தேதிக்குள் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி முடிவடையும். சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 7,300 பேர் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
சென்னையில் 1.20 லட்சம் பேருக்கு தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. 12,000 பேர் தபால் வாக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர் என்று கூறினார்.