வருமான வரித்துறை சோதனை நடக்கும் கல்லூரிக்குத் திரும்பிய ஸ்டாலின், எ.வ. வேலு

வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ள இல்லத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், எ.வ. வேலு ஆகியோர் திரும்பினர்.
வருமான வரித்துறை சோதனை நடக்கும் கல்லூரிக்குத் திரும்பிய ஸ்டாலின், எ.வ. வேலு
வருமான வரித்துறை சோதனை நடக்கும் கல்லூரிக்குத் திரும்பிய ஸ்டாலின், எ.வ. வேலு


திருவண்ணாமலை: வருமான வரித்துறை சோதனை நடந்து வரும் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ள இல்லத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், எ.வ. வேலு ஆகியோர் திரும்பினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், திமுக வேட்பாளர் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட எட்டு தொகுதியிலும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவே நேரடியாகப் போட்டியிடுகிறது. அதன்படி, திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்தும், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவை ஆதரித்தும் திருவண்ணாமலையின் முக்கியச் சந்திப்பான காந்தி சிலை அருகே இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்து கொண்டிருந்த அதேவேளையில், எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர்.

எ.வ. வேலுவின் வீடு, அவருக்குச் சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அது  மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

திருவண்ணாமலையில் உள்ள எட்டு தொகுதி திமுக  வேட்பாளர்களுக்கும், இந்த பொறியியல் கல்லூரியில் வைத்து பணம் வழங்கப்பட இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல்துறையினருடன் சுமார் 20 வாகனங்களில் சென்னையிலிருந்து வந்த வருமான வரித்துறையினர் இந்த சோதனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், திருவண்ணாமலையில் பிரசாரம் மேற்கொள்ள வந்த மு.க. ஸ்டாலின், எ.வ. வேலுவுக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள இல்லத்தில்தான் தங்கியிருந்ததும், அந்த கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரசாரம் முடிந்து ஸ்டாலின், எ.வ. வேலு ஆகியோர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இல்லத்துக்குத் திரும்பியுள்ளனர். அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com