சென்னை: சென்னையில் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 5.99 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வந்த நிலை மாறி, மார்ச் மாதம் முதல் வாரத்தில் அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போது சென்னையில் 4,082 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மார்ச் 25-ஆம் தேதி ஒரே நாளில் 31,633 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனுடன் சேர்த்து இதுவரை சென்னையில் ஒட்டுமொத்தமாக 5,99,044 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.