திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தியாகராஜரின் பாத தரிசனத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர்.
திருவாரூர் தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர மற்ற நாள்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தியாகராஜரின் பாதங்களை காண முடியும். பங்குனி உத்திரப் பெருவிழாவை நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி பதஞ்சலி வியாக்கிர பாத மகரரிஷிகளுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதையொட்டி தியாகராஜசுவாமிக்கு சனிக்கிழமை இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விளமல் பதஞ்சலி கோவிலிலிருந்து பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்கள் புறப்பட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு வந்து, தியாகராஜரின் பாத தரிசனத்தை தரிசித்தனர்.
இதையடுத்து தியாகராஜர், பக்தர்களுக்கு பாத தரிசனம் அருளி வருகிறார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தியாகராஜரை வழிபட்டு வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோ. கவிதா தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.