மதுரை தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). இவரது மனைவி வாணி (38), மகள் ஹர்சினி (2). தங்க நகை செய்யும் தொழிலை விஜயகுமார் செய்து வந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அருகில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, விஜயகுமார், அவரது மனைவி இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தனர். குழந்தை ஹர்சினி தரையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீஸார் மூன்று பேரின் சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தெற்குவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கரோனா பொது முடக்கத்தால் விஜயகுமாரின் தொழில் சரிவர நடைபெறவில்லை. இதனால் தொழிலை மேம்படுத்த அதிக அளவில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கியக் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் விஜயக்குமார் நெருக்கடியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விஜயகுமார் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.