திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள கால்நடை மருத்துவமனையைப் புதுப்பிக்கும் வேட்பாளருக்கே எங்கள் ஓட்டு என கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மன்னார்குடி - திருவாரூர் பிரதான சாலையில், மரக்கடையில் கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு கூத்தாநல்லூர் நகராட்சிக்குள்பட்ட 24 வார்டுகள், கொத்தங்குடி, திருராமேஸ்வரம், வக்ராநல்லூர், ஓவர்ச்சேரி, பெரியக்கொத்தூர், வேளுக்குடி, சித்தனக்குடி உள்ளிட்ட பஞ்சாயத்துகளிலிருந்து கால்நடைகள் அழைத்து வரப்படுகின்றது.
மேலும், மாடுகளுக்கு சினை ஊசி போடுதல், ஜீரணக் கோளாறு, வயிறு உப்புதல் மற்றும் கோமாரி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சையாக்கப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், அந்தக் கட்டடம் முழுவதும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன. குறிப்பாக, கால்நடை மருத்துவர் அறை, மருந்தகம், கட்டடத்தின் உள்பகுதி, மேல் பகுதி, ஜன்னல் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிமிண்ட் காரைகள் பெயர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இம்மருத்துவமனையில் கழிப்பறை வசதியும் கிடையாது.
கட்டடம் பழுதடைந்துள்ளதால், மழைக் காலங்களில் சுவர்கள் ஊறி, மழை நீர் சுவர்கள் மூலம் உள்ளே வருகிறது. மருத்துவர், கால்நடையை ஒட்டி வருபவர்கள் மற்றும் கால்நடைக்கும் குடிப்பதற்கும், சிகிச்சைகளுக்கும் தேவையான குடிநீர் வசதிகள் கிடையாது.
தற்போது, எந்த நேரத்திலும் இடிந்து விழும் தறுவாயில் இருக்கும் இந்தக் கால்நடை மருத்துவமனையை முழுவதுமாக இடித்து விட்டு,புதிதாகக் கட்டித் தர வேண்டும். கால்நடை மருத்துவமனையைக் கட்டித் தர முன்வரும் வேட்பாளருக்கே எங்கள் வாக்கு என, கால்நடை வளர்ப்பவர்கள் கோரிக்கை வைத்து, வேட்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.