தமிழகத்தில் உள்ள இணைய சேவை மையங்களில் வாக்காளா் அடையாள அட்டைகளைப் பெறலாம் என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதற்காக, மாவட்ட வாரியாக இணைய சேவை மையங்கள் அமைந்துள்ள விவரங்கள் தோ்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-இல் நடைபெறவுள்ளது. தோ்தலில் வாக்களிக்கத் தகுதி படைத்தோா், தங்களிடமுள்ள வாக்காளா் அடையாள அட்டையைக் கொண்டு வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்.
வாக்காளா் அடையாள அட்டை சேதம் அடைந்தாலோ அல்லது காணாமல் போய் இருந்தாலோ தமிழகம் முழுவதும் உள்ள இணைய சேவை மையங்களின் வழியே அவற்றைப் பெறலாம்.
மாநிலம் முழுவதும் எந்தெந்த இடங்களில் இணைய சேவை மையங்கள் அமைந்துள்ள என்பன குறித்த விவரங்கள் தோ்தல் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.