சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் சுவாதி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழா கடந்த மார்ச் 22 ஆம் தேதி கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர், தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் கிளி, அன்னம், மயில், சிம்மம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய திருவிழாவான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஜேக, ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, அம்மன் தேருக்கு எழுந்தருளினார். கோயில் முன்பு உள்ள தேரடியிலிருந்து காலை 8.25 மணிக்கு புறபட்ட தேர் முக்கிய வீதியின் வழியாக வலம் வந்த பின் காலை 9.05 மணிக்கு நிலைக்கு வந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.