கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக ஊத்தங்கரை காவல்துறை, துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்கவும், சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவும் காவல் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பதை அறிவிக்கும் வகையில் கொடி அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி ஊத்தங்கரை காவல் நிலையம் முன்பாக காவல் துறையினர், துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். இதில் காவல் ஆய்வாளர்கள் ஊத்தங்கரை லட்சுமி, கல்லாவி முத்தமிழ்ச் செல்வன், சிங்காரப்பேட்டை ரவிச்சந்திரன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் என மொத்தம் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கொடி அணிவகுப்பானது ஊத்தங்கரை காவல் நிலையம் எதிரே தொடங்கி முருகர் கோவில் தெரு, பழைய கடைவீதி, செங்குந்தர் தெரு, கச்சேரி தெரு, எல்.ஐ.சி அலுவலகம், சேலம் மெயின் ரோடு, திருவண்ணாமலை சாலை, அரசு பேருந்து நிலையம் வழியாக, கல்லாவி சாலை, வட்டார வளர்ச்சி அலுவலகம் என சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க துணை ராணுவ பாதுகாப்புப் படையினர் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி சென்றனர்.