சங்ககிரி: முதன்முறையாக சங்ககிரி தொகுதியில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க நகரும் தபால் வாக்கு பெட்டிகள் மூலம் வாக்குப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவினை செலுத்த தேர்தல் அலுவலகத்திலிருந்து மூடி முத்திரையிடப்பட்ட நகரும் தபால் வாக்குப்பெட்டிகள் அந்தந்த பகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்திய தேர்தல் ஆணையம் முதன்முறையாக நூறு சதவீதம் வாக்குப்பதிவுக்காக மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குப்பதிவு செலுத்த இத்தேர்தலில் முதன்முறையாக முன்னேற்பாடுகளை செய்துள்ளது.
அதனையடுத்து சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் 1935 பேரும், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5969 பேரும் என தேர்தல் அலுவலர்களால் கண்டறிப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடி நிலைய கண்காணிப்பாளர்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் படிவம் 12டி வழங்கப்பட்டன. அதில், தபால் வாக்குகள் அளிக்க மாற்றுத்திறனாளிகள் 202 பேரும், 80 வயதிற்கு மேற்பட்ட 1124 பேர் உள்பட மொத்தம் 1326 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
விருப்ப மனு அளித்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்த சங்ககிரி தொகுதி தேர்தல் அலுவலகத்தின் சார்பில் 24 மண்டலமாக பிரிக்கப்பட்டு 24 நகரும் தபால் வாக்கு பெட்டிகளையும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் மூடி முத்திரையிட்டு மண்டல அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.
தபால் வாக்குபெட்டியுடன் வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்க ஒரு மேஜை, மறைப்பு அட்டை, முத்திரை அச்சு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.
முன்னதாக தேர்தல் அலுவலர் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மண்டல, உதவி மண்டல அலுவலர்களிடத்தில் வாக்காளர்கள் தபால் வாக்குகளை பாதுகாப்பாக செலுத்துவது, அதனை சேதமடையாமல் பெட்டியில் செலுத்துதல், வாக்காளருக்கு உரிய பாதுகாப்பு வழங்குதல், வாக்காளிப்பதை வீடியோ பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
உதவி தேர்தல் அலுவலர் எஸ்.விஜி, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அ.செல்வகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெய்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.