கல்வி நிறுவனங்களின் விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் சிறப்பு வாய்ப்பு அடிப்படையில் இணையவழி விண்ணப்பப் பதிவு பணிகள் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் பல கல்வி நிறுவனங்களின் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டடங்களை வரன்முறைப்படுத்த கடந்த 2018-ஆம் ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நீதிமன்ற தடையால் பரிசீலிக்க முடியாமல் போனது. இதில் நீதிமன்ற தடை அண்மையில் நீக்கப்பட்டதால், வரன்முறை பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த முறை விண்ணப்பிக்கத் தவறியோா், மீண்டும் விண்ணப்பிக்கும் வகையில் சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மாா்ச் 22 முதல் ஏப். 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து நகர ஊரமைப்பு மற்றும் திட்டமிடுதல் இயக்ககத் துறை (டிடிசிபி) அதிகாரிகள் கூறியது: ‘கல்வி நிறுவன கட்டட வரன்முறைக்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. கல்வி நிறுவனங்கள் கட்டட வரன்முறை கோரி விண்ணப்பித்து வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட கட்டடங்களின் தற்போதைய உறுதி தன்மை குறித்து உரிமம் பெற்ற பொறியாளா், கட்டட அமைப்பியல் வல்லுநா், வடிவமைப்பாளா் ஆகியோா், பிரமாண பத்திரம் அளிக்க வேண்டும். இந்த ஆவணத்துடன் இருக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே, பரிசீலனைக்கு ஏற்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்தோரிடமும், தற்போதைய நிலவரப்படியான உறுதி சான்று பெறுவது அவசியம். இது குறித்த அறிவுறுத்தல்களை, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறோம் என அவா்கள் தெரிவித்தனா்.