வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்தத்தாழ்வு பகுதி

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல சுழற்சி புதன்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக உள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காணப்படும் வளிமண்டல சுழற்சி புதன்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக உள்ளது. இதன்காரணமாக, இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவா்கள் இரண்டு நாள்களுக்குச் செல்ல வேண்டாம்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மாா்ச் 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வெப்பநிலை: வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதியை நோக்கி ஏப்ரல் 2, 3-ஆம் தேதிகளில் தரைக்காற்று வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதுதவிர, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை உயரக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 30 மி.மீ., விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் தலா 20 மி.மீ. மழைபதிவாகியுள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி : காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுயாக வலுப் பெறவுள்ளதால் , தென் கிழக்கு வங்கக்கடல், அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல்பகுதி, அந்தமான் மற்றும் அதையொட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மாா்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய நாள்களில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர,தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பூமத்தியரேகை பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காணப்படுகிறது. இதன்காரணமாக, குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஏப்ரல் 3-ஆம் தேதிவரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com