கம்பம்: கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2 நாள் பொது முடக்கம் காரணமாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் ஆயிரக்கணக்கான ஏலத்தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளம் மாநிலத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தது.
தேனி மாவட்டத்தை ஒட்டிய இடுக்கி மாவட்டத்தில் சனிக்கிழமை பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு குமுளி, கம்பமெட்டு வழியாக செல்லும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அத்தியாவசிய பொருள்களான பால் மற்றும் காய்கறிகள் மட்டும் சோதனைச் சாவடியை கடந்து கேரளத்துக்குள் சனிக்கிழமை சென்றன.
தேனி மாவட்டத்திலிருந்து இடுக்கி மாவட்டத்தில் உள்ள புளிய மலை, கட்டப்பனை, வண்டிப்பெரியார், சாத்தானோடை, சாந்தம் பாறை, சக்குபள்ளம், வல்லக்கடவு, பாரத்தோடு, நெடுங்கண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருவார்கள்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாள்கள் பொது முடக்கம் என்பதால் ஆயிரக்கணக்கான ஆண், பெண் தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கோடைகாலம் என்பதால் ஏலக்காய் வரத்தும் குறைவாக இருப்பதால் ஏலக்காய் தோட்டங்களில் வேலை குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொற்று பரவல் காரணமாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஓட்டுநர் உள்பட 5 பேர் செல்ல தேனி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். காரணம் போக்குவரத்து செலவுதான். ஒரு ஜீப்பில் 12 பேருக்கு பதில் 4 பேர் அனுமதிக்கப்படுவதே ஏலத்தோட்ட விவசாயிக்கு பொருளாதார இழப்பாகும்.
இதற்கு தீர்வு கரோனா பரவல் குறைந்தால் தான் என்று போக்குவரத்து அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.