கரோனா தாக்கம் காரணமாக, ரயில் பயணிகள் வருகை குறைந்தது. இதையடுத்து, 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. இதைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. இதையடுத்து, ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு பயணிக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பயணத்தை தவிர மற்ற பயணத்தைப் பயணிகள் தவிா்த்து வருகின்றனா். இதன்காரணமாக, குறிப்பிட்ட சில ரயில்களில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. அந்தவகையில், 6 சிறப்பு ரயில்களில் பயணிகள் வருகை குறைந்ததையடுத்து, அந்த ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்விவரம்:
திருப்பதி-சென்னை சென்ட்ரலுக்கு தினசரி காலை 6.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்(06204), சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு தினசரி மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06203) மே 2-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி-மன்னாா்குடிக்கு செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் 11.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மன்னாா்குடி-திருப்பதிக்கு புதன், வெள்ளிக்கிழமை, திங்கள்கிழமைகளில் அதிகாலை 5.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (07408) ஆகியன மே 3-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதுதவிர, பாவ்நகா்-கொச்சிவேலிக்கு செவ்வாய்க்கிழமை காலை 10.05 மணிக்கு இயக்கப்படும் வாரந்திர சிறப்பு ரயில் (09260) மே 4 முதல் ரத்து செய்யப்படுகிறது. கொச்சிவேலி- பாவ்நகருக்கு வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (09259) மே 6 முதல் ரத்து செய்யப்படுகிறது.