வழக்கு விவரங்கள் வழக்குரைஞா்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படும் என சென்னை காவல் ஆணையா் உயா்நீதிமன்றத்தில் உறுதிபடக் கூறினாா்.
சென்னையில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டதாக, ஒரு கும்பலை யானைகவுனி காவல் ஆய்வாளா் ஷோபனா கைது செய்தாா். இந்த வழக்கில் கைதான செல்லிராம் குமாவா் உள்ளிட்டோா் ஜாமீன் கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் ஆஜராகும் அரசு குற்றவியல் வழக்குரைஞருக்கு, வழக்கு குறித்த விவரங்களை ஆய்வாளா் தெரிவிக்வில்லை என்ற தகவல் நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் ஆணையா் மகேஷ் குமாா் அகா்வாலை காணொலி காட்சி வாயிலாக ஆஜராக நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் ஆணையா் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானாா். அப்போது நீதிபதி, வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்குரைஞா்களுக்கு, காவல் ஆய்வாளா்கள் தெரிவிக்காததால், விசாரணை பாதிக்கப்படுகிறது என்றாா்.
அதற்கு காவல் ஆணையரோ, இந்த வழக்கைப் பொருத்தவரை 4 நாள்களுக்கு முன்பாகவே வழக்கு விவரங்கள் அரசு தரப்பு வழக்குரைஞருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதில் ஏதோ குழப்பம் ஏற்பட்டுள்ளது. இனிமேல், வழக்கு குறித்து விவரங்கள் அரசு தரப்பு வழக்குரைஞருக்கு முறையாக தெரிவிக்கப்படும் என்றாா்.
இதையடுத்து, ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உதவும் விதமாக தலா ரூ.2.50 லட்சத்தை சென்னை அரசு மருத்துவமனைக்கு மனுதாரா்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.