தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அவசியம் அறிந்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தி காட்டியிருக்கும் தமிழக மக்களுக்கு அன்பும் நன்றியும். தமிழகத்தின் நம்பிக்கை முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்' எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
'மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆட்சி அமைக்கவிருக்கும் ஸ்டாலின் மற்றும் திமுகவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழக மக்களின் சுடரொளியாக வெளிச்சம் பாய்ச்சி கலைஞரின் பொற்க்கால தமிழகத்தை மீட்டெடுத்து வருங்கால தலைமுறைக்கான தலைவரென முத்திரை பதிக்க வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.
சாதி அடக்குமுறைகளுக்கு எதிரான மையக்கருவுடன் சமீபத்தில் வெளியான 'கர்ணன்' படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.