பாஜகவுக்கு அதிர்ச்சியளித்த தாராபுரம்; 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் எல்.முருகன் தோல்வி

தாராபுரம் தனி தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் திமுக வேட்பாளரான என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
எல். முருகன்
எல். முருகன்

திருப்பூர்: தாராபுரம் தனி தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் திமுக வேட்பாளரான என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தனி தொகுதியானது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தொகுதியாகவே உள்ளது. இதில், நகராட்சியின் 30 வார்டுகளையும், மூலனூர், குண்டடம், தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களையும், கன்னிவாடி, கொளத்துப்பாளையம், ருத்ராவதி, சின்னக்காம்பாளையம் ஆகிய 4 பேரூராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியானது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தொகுதியாகவே உள்ளது.

இத்தொகுதியில் 1952 ஆம் முதல் நடைபெற்ற 15 தேர்தல்களில் அதிமுக, திமுக தலா 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், பாமக, சுயேட்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இதில் மொத்தமாக 2,56,729 வாக்காளர்கள் உள்ள நிலையில் பெரும்பாலும் விவசாயிகள் அதிகம் நிறைந்த தொகுதியாகவே உள்ளது.

நட்சத்திர அந்தஸ்தைப்பெற்ற தொகுதி:

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் மாநிலத் தலைவரான எல்.முருகன் போட்டியிட்டதால் நட்சத்திரத் தொகுதியின் அந்தந்தைப் பெற்றிருந்து.

இந்தத் தொகுதியில் முருகனுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வராக பதவி வகித்த ஓ.பன்னீர் செல்வம் மட்டுமின்றி பாஜக பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதேவேளையில், திமுக சார்பில் புதியமுகமான மக்களிடம் அதிகம் பிரபலம் இல்லாத என்.கயல்விழி என்பவர் போட்டியிட்டார். இதனால் பாஜகவின் வெற்றி இந்தத் தொகுதியில் உறுதி செய்யப்பட்டடதாகவே அக்கட்சியினர் மட்டுமின்றி அதிமுகவினர் மத்தியிலும் ஒரு கருத்து நிலவி வந்தது. இதனால் பாஜகவினர் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை:  

தாராபுரம் நகரில் இஸ்லாமியர்கள் உள்ள வார்டுகளில் பாஜக வேட்பாளர் அதிக அளவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படவில்லை. தேர்தல் வாக்குப்பதிவின்போது 5 பூத்களில் வாக்குச்சாவடி முகவர்கள் இல்லாமல் இருந்தனர். பாஜகவுக்கு பரிட்சயமானவராக இருந்ததாலும் இந்தத் தொகுதியைப் பொருத்தமட்டில் அவரைப் புதுமுகமாகவே பொதுமக்கள் பார்த்துள்ளனர். அவரது தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கான எந்த ஒரு தனித்துவ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளும் இவருக்கு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தெரிகிறது. 

திமுக வேட்பாளரின் பலம்: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அந்தந்த வார்டுகளில் உள்ள பிரச்னைகளுக்குத் தகுந்தவாறு தேவையை நிறைவேற்றி தருவதாக என்.கயல்விழி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதுதொடர்பாக துண்டுபிரசுரங்களை விநியோகித்தும் வீடு வீடாக வாக்கு சேகரித்துள்ளதும், திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் பிரியாததும் அவரது வெற்றிக்கானகாரணமாக் பார்க்கப்படுகிறது.

வாக்குகளைப் பிரித்த நாம் தமிழர், மநீம: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.ரஞ்சிதா 6,753 வாக்குகளைப் பெற்றதும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஏ.சார்லி 2,130 வாக்குகள் பெற்றதும், அமமுக வேட்பாளர் சி.கலாராணி 1,172 வாக்குகள் பெற்றதும் திமுக வேட்பாளருக்கு சாதகமாக அமைந்தது.

தாராபுரம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் என்.கயல்விழி, பாஜக வேட்பாளரான எல்.முருகனைவிட 1,393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தாராபுரம் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:

என்.கயல்விழி (திமுக)-89,986
எல்.முருகன் (பாஜக)-88,593
சி.கலாராணி(அமமுக)-1,172
ஏ.சார்லி-(மநீம)-2,130
கே.ரஞ்சிதா-(நாதக) -6,753
வாக்கு வித்தியாசம்-1,393

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com