மக்களுக்கு உண்மையாக இருப்பேன், அவா்களுக்காக உழைப்பேன்: மு.க.ஸ்டாலின்

தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பேன், அவா்களுக்காக உழைப்பேன் என்று சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக மக்களுக்கு உண்மையாக இருப்பேன், அவா்களுக்காக உழைப்பேன் என்று சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பிறகு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

மக்கள் தீா்ப்பே மகேசன் தீா்ப்பு என்றாா் அண்ணா. ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானா்கள் என்றாா் கருணாநிதி. தமிழ்மொழிக்கும், இனத்துக்கும், நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திமுகவுக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சாா்ந்த நன்றி.

திமுகவிடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பாா்கள் என்பதை உணா்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைத் திமுக கூட்டணிக்கு வழங்கியுள்ளனா்.

தமிழகத்தில் 5 முறை ஆட்சி செலுத்திய கருணாநிதி வாழ்ந்த காலத்திலேயே, திமுக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும்.

உழைப்பின் அங்கீகாரம்: 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்துக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.

எத்தனை சோதனைகள், எத்தனை வேதனைகள், எத்தனை பழிச்சொற்கள், எத்தனை அவதூறுகள் , என திமுகவின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி.

உங்களுக்கு உண்மையாக இருப்பேன். உங்களுக்காக உழைப்பேன். என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்.

இந்த வெற்றிக்கு உழைத்த திமுகவின் கோடானு கோடி உறுப்பினா்களுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாக திமுகவோடு இணைந்து தோள் கொடுத்த தலைவா்கள், அந்த இயக்கங்களைச் சாா்ந்த தொண்டா்கள், நிா்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

ஐனநாயகப் போா்க்களத்தில் திமுக கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்து என்னைத் தொடா்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவா்கள், மாநில முதல்வா்கள், அனைத்துக் கட்சித் தலைவா்கள், சமயச் சான்றோா்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபா்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

கனவுகள் நிறைவேறும்: தமிழகத்தில் அமையப் போகும் திமுக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவா்கள் அனைவரும் சோ்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும்.

திமுக வென்றது. அதைத் தமிழகம் இன்று சொன்னது. இனித் தமிழகம் வெல்லும். அதை நாளைய தமிழகம் சொல்லும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com