கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால், அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தேக்கடி, பெரியாறு அணை, முல்லையாறு மற்றும் சிவகிரி மலைத்தொடர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
இதனால் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து ஏற்பட்டு அணைக்குள் நீர் வந்து கொண்டிருக்கிறது.
பெரியாறு அணைக்குள் வினாடிக்கு 775 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 126.90 அடி உயரமாகவும் (142), நீர் இருப்பு 4,028 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 775 கன அடியாகவும், அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு, 150 கன அடியாகவும் இருந்தது.
பெரியாறு அணைப் பகுதியில் 38.8 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 23.2 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.