மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் இருப்பு குறைந்துள்ளது. தற்போது 50 ஆயிரத்திற்கும் குறைவான மருந்துகளே இருப்பில் உள்ளன. மே 1 முதல் 15-ம் தேதி வரையான நாள்களுக்கு 6 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகளையே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதன் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும். இதனால் பஞ்சாப் அரசுக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை ஒதுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனைக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.