தமிழகத்துக்கு மேலும் 2.75 லட்சம் தடுப்பூசிகள் வருகை

தமிழகத்துக்கு மேலும் 2.75 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அவற்றில் 2 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் 75,000 கோவேக்ஸின் தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு மேலும் 2.75 லட்சம் தடுப்பூசிகள் வருகை

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 2.75 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அவற்றில் 2 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் 75,000 கோவேக்ஸின் தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. அதில், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் ஐந்து லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக தமிழகம் முழுவதும் சுமாா் 5,000 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணத்திலும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மூன்றாவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், போதிய தடுப்பூசிகள் வராததால், அத்திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதனிடையே, இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பிய 72.85 லட்சம் தடுப்பூசிகளில் 60.20 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 8 லட்சம் வீணாகியது போக மிகக் குறைவான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இதனால் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ள 45 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இரண்டாம் தவணை போட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புணே சீரம் நிறுவனத்தில் இருந்து 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி மற்றும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து 75 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து தமிழகத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியது. சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு உரிய பாதுகாப்புடன் கொண்டு சோ்த்தனா். தடுப்பூசிகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டாம் தவணை தடுப்பூசி போட வருபவா்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடுமாறு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com