உடுமலை அருகே உள்ள மலைவாழ் மக்கள் சிலர் யானைகளை குச்சி மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
உடுமலை வனப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்நிலையில் கோடை காலத்தில் வறட்சியான சூழ்நிலையில் குடிநீரைத் தேடி யானைகள் வனத்திலிருந்து வெளியே வருவது வழக்கம்.
இந்நிலையில் புதன்கிழமை மூன்று யானைகள் குடிநீருக்காக வனத்திலிருந்து திருமூர்த்தி அணையை நோக்கி வந்துள்ளன. அப்போது திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அந்தப்பகுதியில் இருந்துள்ளனர். அதில் சிலர் யானைகளை குச்சி மற்றும் கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் பீதியான யானைகள் பிளிறியபடி நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் ஓடின. இதைப் பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் அந்த யானைகளை மலைவாழ் மக்கள் கொடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
பொதுமக்களையும் வன ஆர்வலர்களையும் நெஞ்சை பதற வைக்கும் இந்தக் காட்சிகளை பார்த்த வனத்துறையினர் உடனடியாக திருமூர்த்திமலை செட்டில்மென்ட் பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும் யானைகளை தாக்கிய நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து கேட்டபோது வனச் சட்டத்தின்படி இவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட உள்ளதாக மாவட்ட வனப் பாதுகாவலர் கணேஷ்ராம் தெரிவித்தார்.