ரெம்டெசிவர் மருந்துக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் அதிகளவில் கூடுவது கரோனா பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்றால் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் விற்கும் அளவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த மருந்துக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் நாள்தோறும் நீண்ட வரிசையில் நின்று பெற்று வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தினாலேயே கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரெம்டெசிவர் மருந்து வாங்க வந்த இம்ரான் என்பவர் இதுபற்றி தெரிவிக்கையில், "எனது அம்மாவுக்கு ரெம்டெசிவர் மருந்து மிகவும் முக்கியமானது. நான் கடந்த 3 நாள்களாக முயற்சித்து வருகிறேன். இந்த நடைமுறை முழுவதும் பெரிய சிக்கலில் உள்ளது. ஒரு பெருந்தொற்றை இப்படி கையாண்டால், நாம் விரைவில் மீள முடியும் என்ற நம்பிக்கை இல்லை" என்றார்.
முன்னதாக, நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற அளவிலேயே தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் ரெம்டெசிவர் மருந்தை 20 ஆயிரம் குப்பிகளாக உயர்த்தக் கோரி மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகக் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.