தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 11) மிதமான மழை பெய்யக்கூடும்.
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 11) மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தென் தமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதியில் 1.5 கிலோமீட்டா் உயரத்தில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 11: மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் சேலம், தருமபுரி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 11) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 12: கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் புதன்கிழமை (மே 12) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 13: மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் வியாழக்கிழமை (மே 13) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 14: மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 70 மி.மீ., நாகா்கோவிலில் 50 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 40 மி.மீ., திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரத்தில் 30 மி.மீ., மதுரை மாவட்டம் சோழவந்தான், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, விருதுநகா் மாவட்டம் சிவகாசி, தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மத்திய தெற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடலில் 3.1 கிலோமீட்டா் வரை வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மே 14-ஆம் தேதி உருவாகும். இதன்காரணமாக, மத்திய தெற்கு அரபிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் மே 13- ஆம்தேதி மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுவீசும். இதுதவிர, மத்திய தெற்கு அரபிக்கடல், குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் மே 14 ஆம் தேதி மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மே 13,14 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com