காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலின் 5 உண்டியல்கள் 9 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை ரூ.51,86,327 இருந்தது.
அத்திவரதர் பெருவிழாவிற்கு பெயர் பெற்றதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பழமையான திருக்கோயில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இத்திருக்கோயிலில் இருந்த 5 உண்டியல்கள் 9 மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை காஞ்சிபுரம் உதவி ஆணையர் மா.ஜெயா, கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன்,ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை 51,86,327 பணமும், தங்கம் 89 கிராமும், வெள்ளி 556 கிராமும் இருந்தன.