சென்னை: தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
மே 12 - உலக செவிலியர்கள் தினமாக 1965 -ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உலககையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது செவிலியர்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். அப்படிப்பட்ட செவிலியர்களை போற்றும் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
செவிலியர்கள் தினத்தையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கரோனா பேரிடர் காலம் போர்க்களத்திற்கு இணையானதுதான். இக்களத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் துணை நிற்கும் அனைத்து செவிலியர்களின் நலன்களும் உரிமைகளும் காக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இருபால் செவிலியர்களுக்கும் நன்றி கலந்த செவிலியர் தின வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.