திருப்பூர்: திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் திருநாவுக்கரசு (54) உயிரிழந்தார்.
திருப்பூர் மாநகராட்சி 4 -ஆவது மண்டல உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்தவர் திருநாவுக்கரசு, இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் தெரியவந்தது. இதையடுத்து, நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யட்டது.
இதைத்தொடர்ந்து, திருப்பூரை அடுத்த வீரபாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.