இஸ்லாமியர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த ஒரு மாதமாக பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ‘ஈதுல் பித்ர்” என்னும் ஈகைத் திருநாளைப் பெருமகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை நமது இஸ்லாமிய சகோதரர்கள் இன்றைய கொரோனா பாதிப்பு காலத்தில் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வடமாநிலங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு சாதி, மதம் பாராமல் தகனம் செய்யும் காட்சிகள் பெருமைப்படுவதாக இருக்கிறது. நாடு முழுவதும் பல இடங்களில் இஸ்லாமிய இளைஞர்கள், கரோனா நோயாளிகளுக்கு உணவுகளை வினியோகிப்பதும், மருந்து மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வினியோகிப்பதும் உத்தரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் தொடர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ரமலான் பண்டிகையை மகிழ்வோடு கொண்டாட முடியாத சூழல் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அவர்கள் செய்யும் அறப்பணிகள் அந்த குறையைப் போக்கும் விதமாக அமைந்துள்ளது. சகோதரத்துவத்தைப் போற்றும் அவர்களது சேவை, என்றென்றும் நினைவுகூரப்படும்.
இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு ‘சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு, கரோனா எனும் சோதனையான காலகட்டத்தில் ரம்லான் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் நிலையில் இருக்கிறேன். நபிகளின் விருப்பப்படி உங்களது சமுதாயப் பணி தொடர, ரம்லான் நாளில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.