கம்பம்: தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொதுமுடக்கம் காரணமாக தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்குச் செல்லும் 2 மலைச்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன.
தமிழகம் மற்றும் கேரளத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை முன்னிட்டு இரு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகள் கம்பமெட்டு அடிவாரம், லோயர் கேம்ப் நுழைவு பகுதியிலேயே அடைக்கப்பட்டன.
இரு மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகள் வழியாக மருத்துவ சேவைக்கான வாகனங்கள் செல்வதை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றன.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு பால் மற்றும் காய்கனிகள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இரு மாநில காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் அத்தியாவசிய வாகனங்கள் செல்வதை கண்காணித்து வருகின்றனர்.