துளசி அய்யா வாண்டையார் மறைவு: ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

கி.துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
துளசி அய்யா வாண்டையார் மறைவு: ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்

கி.துளசி அய்யா வாண்டையார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

மு.க.ஸ்டாலின்: டெல்டா மாவட்ட மக்களால் ‘கல்விக் கண் திறந்த வள்ளல்’ எனக் கொண்டாடப்படும் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கி. துளசி அய்யா வாண்டையார் மறைவெய்திய செய்தியறிந்து ஆற்றொணாத் துயரம் கொண்டேன். இறுதிவரை அண்ணல் காந்தியடிகளின் ஆத்மார்த்த சீடராக விளங்கி வந்த அய்யா வாண்டையார் மறைவு டெல்டா மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பேரிழப்பாகும். துளசி அய்யா வாண்டையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், டெல்டா மாவட்டத்து மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி: காங்கிரஸ் பேரியக்க வளர்ச்சியில் பெரும்துணையாக இருந்த கி.துளசி அய்யா வாண்டையார் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது மகன் கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்து இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ: பெருமதிப்பிற்கு உரிய பெருந்தகை துளசி ஐயா வாண்டையார், இயற்கை எய்திய செய்தி அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு, ஆற்ற இயலாதது. பழம்பெரும் தலைவர்களை, அண்மைக்காலமாக இழந்து கொண்டே வருகின்ற அதிர்ச்சியை, தாங்குவது அல்லாமல், வேறு வழி இன்றி, தவிக்கின்றது தமிழ்நாடு. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், அவரால் பயன் பெற்றவர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ராமதாஸ்: காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், கல்விக் கொடையாளருமான பூண்டி துளசி அய்யா வாண்டையார் காலமானர் என்ற  செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ராஜிவ்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் காமராசர், இராஜாஜி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கி பழகியவர். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். பூண்டி பகுதியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவியர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன்: தமிழகத்தில் மூத்த தலைவர், சிறந்த கல்வியாளர், தஞ்சை மாவட்டம் ஐயா. பூண்டி துளசி அய்யா வாண்டையார் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது மறைவு தஞ்சை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் பேரிழப்பாகும். அவர்களை இழந்த வாடும் அவர்களது குடும்பத்தார் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தினருக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

சு. திருநாவுக்கரசர்: தஞ்சை மாவட்டம் ஏ.வி.வி.எம் ஸ்ரீ புஷ்பம் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகக் குழு தலைவரும், தஞ்சை மாவட்ட நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான அண்ணன் திரு பூண்டி துளசி அய்யா வாண்டையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தமும், வேதனையும் அடைகிறேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  தன் தந்தையை இழந்து வாடும் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவர் அன்பு சகோதரர் திரு.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், புஷ்பம் கல்லூரியின் நிர்வாகிகள், ஆசிரியப் பெருமக்கள் மாணவர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com