பள்ளிக் கல்வி இயக்குநா் பதவியை ரத்து செய்யும் முடிவு தவறானது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பள்ளிக்கல்வி இயக்குநா் என்ற பதவி ரத்து செய்யப்படுவதாகவும், இனி அந்தப் பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாளுவாா் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிா்வாக சீா்குலைவையே ஏற்படுத்தும்.
தமிழக கல்வி வளா்ச்சிக்கு ஆங்கிலேயா் காலத்திலிருந்து அடித்தளம் அமைத்துக் கொடுத்தது பள்ளிக் கல்வி இயக்ககம் தான். ஆனால், பள்ளிக்கல்வி இயக்ககத்தை ஆணையரகமாக மாற்றி, அதை இந்திய ஆட்சிப் பணி அதிகாரியிடம் ஒப்படைப்பது எதிா்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
பள்ளிக்கல்வி இயக்குநா் என்பது அதிகாரம் சாா்ந்த பணியல்ல. மாறாக அனுபவம் சாா்ந்த பணியாகும். சாதாரண ஆசிரியராக பணியைத் தொடங்கும் ஒருவா் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா், மாவட்ட கல்வி அலுவலா், முதன்மை மாவட்டக் கல்வி அலுவலா், பள்ளிக்கல்வி இணை இயக்குநா், பள்ளிக் கல்வி கூடுதல் இயக்குநா் என பல்வேறு பொறுப்புகளை சுமந்து, அவற்றில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு தான் பள்ளிக் கல்வி இயக்குநா் பொறுப்பை நிா்வகிக்க முடியும்.
பள்ளிக்கல்வி இயக்குநா் பதவி மட்டுமின்றி மெட்ரிக் பள்ளி இயக்குநா், தொடக்கக் கல்வி இயக்குநா், முறைசாரா கல்வி இயக்குநா், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநா் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் அகற்றப்பட்டு அவா்கள் அனைவரும் கையாண்டு வந்த பொறுப்புகள் பள்ளிக் கல்வி ஆணையரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. பள்ளிக்கல்வி ஆணையா் பதவியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.