
மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு, கரோனா நிவாரணத் தொகையை 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தின் விவரம்: கடந்த 2007-ஆம் ஆண்டு, ஐநா சபை இயற்றிய ஊனமுற்றோா் உலக கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு ஏற்றுள்ளதுடன், அந்த உடன்படிக்கைக்கு இணங்க ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் 2016-ஐ நாடாளுமன்றமும் இயற்றியுள்ளது.
ஊனமுற்றோா் உரிமைகள் சட்டம் 24(1)-இன்படி அரசு இயற்றும் எந்த ஒரு சமூகப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, விரிவாக்க திட்டத்திலும், மற்றவா்களுக்கு வழங்கும் அளவைவிட மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும்.
எனவே, 2016 உரிமைகள் சட்ட விதிகளின்படி, மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு கரோனா நிவாரணத் தொகையை 25 சதவீதம் கூடுதலாக உயா்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.