சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று சிகிச்சைப் பிரிவில் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார்.
மானாமதுரை அரசு மருத்துவமனையில் புதிதாக கரோனா தொற்று சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த வார்டுகளில் தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மானாமதுரை வட்டாட்சியர் மாணிக்கவசகம் இந்த அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு கரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணி பெண்களிடம் சிகிச்சை முறைகள் குறித்தும் வசதிகள் பற்றியும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அதன்பின் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் அவர்களுக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது இவர்கள் கரோனா சிகிச்சை வார்டுக்கு தேவைப்படும் வசதிகள், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை குறித்து வட்டாட்சியரிடம் வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் மாணிக்கவாசகம் தெரிவித்தார்.