கருப்புப் பூஞ்சை நோய் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் இதனை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக சுகாதாரத்துறை அறிவிக்க உள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கருப்புப் பூஞ்சை நோயை அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய நோயாக அறிவிக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
‘மியூகார்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய் என்று வாட்ஸ்ஆப்களில் வதந்தி பரவி வருகிறது. பொதுமக்கள் யாரும் இதுகுறித்து பதட்டம் அடைய வேண்டாம், பீதியடைய வேண்டாம். இது பரவும் நோயல்ல. குணப்படுத்தும் நோய்தான்.
ஆக்சிஜன் உதவி பெறுபவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் காரணமாக அவர்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய்த் தாக்குதல் ஏற்படுகிறது.
தமிழகத்தில் புதிதாக 3 பேர் உள்பட இதுவரை 9 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் . இந்த 9 பேரில் 7 பேர் சர்க்கரை நோயாளிகள். அந்த 7 பேருக்கும் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மேலும் கருப்புப் பூஞ்சை நோயால் தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
கருப்புப் பூஞ்சை நோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதாவது தமிழகத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் கருப்புப் பூஞ்சை பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவர்கள் அறிந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேணும்.
மேலும் தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் குறித்து ஆய்வு செய்ய சுகாதாரத்துறை இயக்குநர் தலைமையில் 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.