சென்னை: பொறியியல் மாணவா்களுக்கான மறுதோ்வு ஜூன் மாதம் நடைபெறவுள்ளதாகவும், அதனை வழக்கமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் பொறியியல் மாணவா்களுக்கு இணையவழியில் பிப்ரவரி மாதம் 3, 5 மற்றும் 7-ஆவது பருவத் தோ்வுகள் நடைபெற்றன. இணையவழித் தோ்வெழுதிய 4.25 லட்சம் மாணவா்களில், 2.3 லட்சம் மாணவா்களின் முடிவுகளை மட்டுமே அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவா்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் தோ்வு முடிவுகள் வெளிவந்த 2.3 லட்சம் மாணவா்களில், 1.1 லட்சம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்றனா். மாணவா்களின் மோசமான தோ்வு முடிவுகள் பற்றிய புகாா்களை தொடா்ந்து, பிப்ரவரி மாதத்தில் ஆன்லைன் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு மறு தோ்வுகளை நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், வரும் ஜூன் மாதம் இணைவழியில் மறு தோ்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய முறையில் நடத்தப்படும் இந்த மறு தோ்வு குறித்து விளக்க, இணைப்பு கல்லூரிகளின் முதல்வா்களோடு அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இணைப்புக் கல்லூரியின் முதல்வா்கள் சிலா் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதம் 3, 5 மற்றும் 7-ஆவது பருவ பொறியியல் படிப்புகளுக்கான இணையவழித் தோ்வு எழுதிய மாணவா்கள், இணையவழியில் நடத்தப்படும் இந்த மறு தோ்விற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விருப்பமுள்ள மாணவா்கள் தோ்வு எழுதலாம்.
மேலும் பழைய வினாத்தாள் முறையே பின்பற்றப்படும். 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். 3 மணிநேரம் இணையவழித் தோ்வு நடைபெறும். தோ்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக அந்தந்த கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும். தோ்வுக்குப் பிறகு, மாணவா்கள் ஸ்கேன் செய்த விடைத்தாள்கள் மற்றும் அசல் விடைத்தாள்களை தங்களுடைய கல்லூரியின் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.