சென்னை: தென்மேற்குப் பருவமழை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மே 21-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது.
நாட்டை வளம் செழிக்கச் செய்யும் பருமழையான தென்மேற்கு பருவமழை ஒவ்வோராண்டும் கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். இதன்பிறகு, நாடுமுழுவதும் பரவலாக மழையை கொடுக்கும்.
பருவமழை தொடங்குவதற்கு அறிகுறியாக தெற்கு அந்தமான் பகுதியில் பருவமழை முன்னதாகத் தொடங்கும். இந்த மழை படிப்படியாக விரிவடைந்து, கேரளத்துக்கு வந்தடையும் போது, பருவமழை தீவிரமாகும்.
இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை மே 21-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது: நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிகுறிக தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. இந்தப்பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மே 21-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. இதன்பிறகு, பருவமழை விரிவடைந்து, கேரளத்தை அடையும் என்றாா் அவா்.