திருப்பூர்: திருப்பூரில் இ-பதிவு செய்யாமல் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் கரோனாநோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பூர் மாநகரிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி மாநகரில் உள்ள 8 காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் இரும்புத் தடுப்பகளை அமைத்து வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் திருப்பூர் மாநகரில் வாகன ஓட்டிகளில் அதிக அளவில் வெளியில் சுற்றி வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பாலம் அருகில் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவு செய்யாமல் அத்தியாவசியத் தேவைகள் இல்லாமல் வெளியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு காவல் துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது வாகன ஓட்டிகளில் பெயர், முகவரி, செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட தகவல்களையும் சேகரித்தனர். மேலும், பரிசோதனையின் முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் இ-பதிவு செய்யாமல் வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளுக்கு மீது கரோனா பரிசோதனை நடத்தவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.