கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாகத் திருவிழாவன்று பக்தர்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் பிறந்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூரில் பத்து நாள்கள் நடைபெறும். ஆனால் நிகழாண்டில் கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் இத்திருக்கோயிலில் கடந்த ஏப். 26-ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு, நாள்தோறும் பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும், காலை 9 மணியளவில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனையும் நடைபெற்றது.
கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் பக்தர்கள் அனுமதியில்லாததால் கோயில் வளாகமே வெறிச்சோடி காணப்பட்டது.